உரை விளக்கங்கள், இலக்கணங்களை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு, தன் வாழ்க்கை அனுபவங்களையும் கற்பனையையும் மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவன் இக்கவிதைகளை அணுக வேண்டும். கவிதையின் அசல் வரிகளை மட்டுமே எடுத்துக் கொண்டால் போதும். அவற்றுடன் உள்ள துறைக் குறிப்புகள் போன்றவைகூடத் தேவை இல்லை.... சங்க காலக் கவிதைகளை, சமகால நவீன கவிதைகளை எப்படி வாசிக்கிறோமோ அப்படி வாசிப்பதே நல்லது... பண்டைய கவிதைகளில் வெறும் வர்ணனைகளாகவோ அணியலங்காரங்களாகவோ நாம் கண்டு வருபவை உண்மையில் உக்கிரமான படிமங்களாக இருக்கக்கூடும்.....அந்தப் படிமம் அவனையும் மீறிய ஒன்று. சிற்பி செதுக்கியதுதான் தெய்வச் சிலை. ஆனால் தெய்வம் அவனுக்குக் கட்டுப்பட்டதல்ல. அவனும் வணங்கும் பிரம்மாண்டம் அது. ஒரு கனவுக்கு முடிவின்றி அர்த்தம் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.