மனிதனின் மரணத்தை அறிவித்தவர் ஃபிரெஞ்சு பின் நவீனத்துவவாதியான மிஷல் ஃபூக்கோ. அதன் இயல்பான அர்த்தத்தில் மனிதன் என்று அழைப்பதற்கு ஏற்ப யாரும் இல்லை. இருப்பவை யாவும் உடல்களே. அதிகாரத்தின் உரையாடல்கள் மூலம் சாதுவாக்கப்பட்ட உடல்கள். மன்னராட்சியாக இருந்தாலும் சரி, ஜனநாயக ஆட்சியாக இருந்தாலும் சரி, கம்யூனிஸ்ட் அரசாக இருந்தாலும் சரி, அந்த அரசின் ஆட்சியின் கீழ் வாழும் மனிதன் என்பவன், உடல் என்ற சிறையில் அடைக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவாக இருக்கிறான் என்கிறார் ஃபூக்கோ.