கடந்துபோன மூன்று தசாப்த காலத்தில் யுத்தத்தால் வதைபட்ட ஈழச் சனங்களின் வாழ்வில் அவ்வப்போது அமைதிக்கால ஒளிக்கீற்றுகள் சட்டென மின்னி மறைந்திருக்கின்றன.
இந்திய ராணுவம் அந்த மண்ணில் போய் இறங்கியபோது அப்படியொரு நம்பிக்கை அந்த மக்களிடத்தில் முகிழ்த்திருந்தது. பதுங்குகுழியற்ற வாழ்வொன்றை பாரதம் தந்துவிடுமென அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். முடிவில் நம்பிக்கைகள் சிதைந்தழிந்தன. சனங்களின் முகங்களில் போர் அமிலமாய்த் தெறித்தது.
நீண்டு பத்தாண்டுகளின் பிறகு மற்றுமொரு அமைதிக்கான காலம் ரணில் புலிகள் பேச்சுக்காலத்தின்போது அரும்புவதாக அந்தச் சனங்கள் நம்பினார்கள்.